

நெல்லை:
ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூரை சேர்ந்தவர் சண்முகம்(வயது 74). இவர் 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் வைத்து வளர்த்து வருகிறார்.
அந்த ஆடுகளை நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள வயல்வெளிகளில் கிடை போட்டும் தொழில் நடத்தி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லையில் கிடை போட்ட சண்முகம், நேற்றிரவு தனது ஆடுகளை அங்கிருந்து மேலப்பாளையம் வழியாக முக்கூடலுக்கு ஓட்டிச்சென்றார்.
இரவு நேரமாகிவிட்டதால் மேலப்பாளையத்தில் உள்ள ஒரு வயல்வெளியில் ஆடுகளை விட்டுவிட்டு அங்கு தூங்கினார். இன்று அதிகாலை தூங்கி எழுந்து பார்த்தபோது சுமார் 68 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகம், மேலப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். கால்நடைத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆடுகள் எவ்வாறு இறந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கால்நடைத்துறை டாக்டர்கள் இறந்த ஆடுகளை பரிசோதனை செய்து வருகின்றனர்.