சீக்கிய பெண்ணை நாடு கடத்த இங்கிலாந்தில் எதிர்ப்பு - 62 ஆயிரம் பேர் அரசுக்கு மனு

உரிய ஆவணங்கள் இல்லாமல் 11 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்துக்கு வந்த சீக்கிய மூதாட்டியை நாடு கடத்த எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் மனு கொடுத்துள்ளனர்.
சீக்கிய பெண்
சீக்கிய பெண்
Published on

லண்டன்:

பஞ்சாபை சேர்ந்த சீக்கிய மூதாட்டி குர்மித் கவுர் சகோதா (வயது 75). கணவரை இழந்த இவர், கடந்த 2009-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு வந்தார். மேற்கு மிட்லண்ட்ஸ் மாகாணம் ஸ்மெத்விக் நகரில் குடியேறினார்.

ஆனால் அவரிடம் எந்த ஆவணங்களும் இல்லை. எனவே, இங்கிலாந்து விசா மற்றும் குடியேற்ற விதிகளின்படி, அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட வேண்டும்.

ஆனால், இந்தியாவில் தனக்கென எந்த குடும்பமும் இல்லை என்றும், எனவே, இங்கிலாந்திலேயே தொடர்ந்து இருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அரசிடம் குர்மித் கவுர் சகோதா மனு கொடுத்தார். ஆனால் அந்த மனு நிராகரிக்கப்பட்டது.

அவரை நாடு கடத்தும் முயற்சிகள் ஒருபுறம் நடந்து வருகின்றன. சகோதா, ஸ்மெத்விக்கில் உள்ள ஒரு சீக்கிய குருத்வாராவுக்கு வரும் சீக்கியர்களுக்கு உதவிகள் செய்து, அவர்களிடையே நன்மதிப்பை பெற்றுள்ளார். அதனால் அவரை சீக்கிய குடும்பங்கள் தத்தெடுத்துள்ளன.

இந்த நிலையில், சகோதாவை நாடு கடத்தக்கூடாது என்று இங்கிலாந்து உள்துறை அலுவலகத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரு ஆன்லைன் மனு பிரசாரத்தை ஸ்மெத்விக்கில் வசிப்பவர்கள் தொடங்கி உள்ளனர். அதில், 62 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

அதே சமயத்தில், இங்கிலாந்திலேயே சட்டப்படி தங்கியிருக்க எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்று சகோதாவிடம் விளக்கி இருப்பதாக இங்கிலாந்து உள்துறை அலுவலகம் கூறியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com