காட்பாடியில் திருமணத்திற்கு சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் செயின் பறிப்பு

காட்பாடி பகுதியில் தொடர்ந்து செயின் பறிப்பு திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் அப்பகுதி பெண்கள் தெருவில் தனியாக நடந்து செல்ல அச்சப்படுகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வேலூர்:

வேலூர் வேலப்பாடி பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரமாபாய் (வயது 54). இவரது உறவினர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சி காட்பாடி காந்திநகரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.

வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு ரமாபாய் பஸ்சிலிருந்து இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

அணைக்கட்டு நந்தகுமார் எம்.எல்.ஏ. வீட்டின் அருகே நடந்து சென்றபோது பைக்கில் அவரை பின்தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் ரமாபாய் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு வேகமாக பைக்கில் தப்பிச் சென்றனர். சங்கிலி பிடித்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

ரமாபாய் திருடன் திருடன் என கூச்சலிட்டார். அதற்குள் செயின் பறித்த வாலிபர் தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து ரமாபாய் விருதம்பட்டு போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள வீடுகளில் முன்பாக பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர். எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள எம்.எல்.ஏ. வீட்டின் அருகேயே செயினை பறித்துச் சென்ற சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காட்பாடி பகுதியில் தொடர்ந்து செயின் பறிப்பு திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் அப்பகுதி பெண்கள் தெருவில் தனியாக நடந்து செல்ல அச்சப்படுகின்றனர்.

எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com