சாலைப்பணியாளர் கொலை வழக்கில் கள்ளக்காதலன் உள்பட கூலிப்படையை சேர்ந்த 4 பேர் கைது - 2 வாகனங்கள் பறிமுதல்

சமயபுரம் அருகே நடந்த சாலைப்பணியாளர் கொலை வழக்கில் கள்ளக்காதலன் உள்பட கூலிப்படையை சேர்ந்த 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

சமயபுரம்:

பெரம்பலூர் மாவட்டம் இருர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்து (வயது 50). இவர் பெரம்பலூரில் சாலைபணியாளராக வேலை பார்த்துவந்தார்.

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள சி.ஆர். பாளையத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு முத்து வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், முத்துவின் மனைவி சித்ராவிற்கு அதே ஊரைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் கள்ளக்காதல் இருந்ததும், இது முத்துவிற்கு தெரிந்ததால், அவரை கள்ளக்காதலனை ஏவிவிட்டு கொலைசெய்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் சித்ராவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சித்ராவின் கள்ளக்காதலன், எம்.ஆர்.பாளையத்தைச் சேர்ந்த சிலம்புகுட்டி (என்கிற) சிலம்பரசன் (வயது 22) மற்றும் கூலிப்படையாக செயல்பட்ட பல்லபுரத்தை சேர்ந்த முருகானந்தம் (35), கார்த்திக்ராஜா (19), லால்குடி அருகே உள்ள சிறுமருதூரை சேர்ந்த மணிகண்டன் (28) ஆகிய 4 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com