தஞ்சை அருகே டிராக்டரில் அடிபட்டு 3 பேர் பலி

தஞ்சை அருகே டிராக்டரில் அடிபட்டு 3 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருவையாறு:

தஞ்சையை அடுத்த திருவையாறு அருகே உள்ள கீழப்புனவாசல் தமிழர் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் மணிகண்டன் (வயது 32). திருவையாறு மேல வட்டத்தை சேர்ந்த ஜெகநாதன் மனைவி சக்குபாய்(70), பிரகாஷ் மகன்கள் அகிலேஷ்(12), பரணீஸ் (10) ஆகிய 4 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் திருவையாறில் இருந்து தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அரசூர் அருகே சென்றபோது ஒரு டிராக்டர் இரண்டு டிரெய்லருடன் தஞ்சை குருங்குளம் சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை ஏற்றி சென்று கொண்டு இருந்தது.

அந்த டிராக்டர் அரசூர் முருகன் கோவில் அருகே சென்றபோது ரோட்டின் குறுக்கே சென்ற கேபிள் ஒயர், டிராக்டர் டிரெய்லரில் மாட்டி அறுந்து கீழே விழுந்தது. அந்த நேரத்தில் மணிகண்டன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் வரவும் மணிகண்டனின் கழுத்தில் கேபிள் ஒயர் விழுந்தது.

இதில் நிலை தடுமாறி மணிகண்டன், சக்குபாய், அகிலேஷ், பரணீஸ் ஆகிய 4 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். இதில் டிராக்டரில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே மணிகண்டன், சக்குபாய், அகிலேஷ் ஆகிய 3 பேரும் பலியானார்கள். பரணீஸ் மட்டும் காயத்துடன் உயிர் தப்பினான்.

இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு சித்திரவேல், நடுக்காவேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் ஆகியோர் பலியான மணிகண்டன், ஜக்குபாய், அகிலேஷ் ஆகிய 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பரணீசை சிகிச்சைக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் பலியான மணிகண்டன், தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com