

கயத்தாறு:
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே மேட்டுபிராஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 52). விவசாயியான இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் நேற்று காலையில் வழக்கம்போல் ஆடுகளை அங்குள்ள காட்டுப்பகுதியில் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார்.
இந்த நிலையில் மதியம் 2 மணி அளவில் அப்பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது திடீரென்று ஆடுகளின் மீது மின்னல் தாக்கியது. இதில் 25 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தன.
இதனைப் பார்த்த செல்லத்துரை அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பார்வையிட்டனர். அவர்கள், செல்லத்துரைக்கு நிவாரண உதவி வழங்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர்.