கொள்முதல் செய்யாததால் மழையில் நனைந்து முளைவிட்ட 10 ஆயிரம் நெல் மூட்டைகள்

கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிட்டு வளர்ந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிட்டுள்ளதை காணலாம்
நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிட்டுள்ளதை காணலாம்
Published on

நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த நெல்வாய் ஊராட்சியில் தென்னல், எஸ்.கொளத்தூர் ஆகிய பகுதிகளில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைவித்த நெல்லை நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்கின்றனர்.

அதன்படி கடந்த மாதம் நெல்வாய், தென்னல், எஸ்.கொளத்தூர் மற்றும் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல்லை விற்பனைக்காக கொண்டு சென்றனர். அப்போது அதிகாரிகள் கடந்த 23-ந் தேதியே நெல்லை கொள்முதல் செய்யும் காலம் முடிவடைந்துவிட்டது. இதனால் நெல் மூட்டைகளை தற்போது கொள்முதல் செய்ய முடியாது என்று கூறியுள்ளனர்.

இதனால் விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் கொள்முதல் நிலைய வளாகத்தில் வைத்திருந்தனர்.

இந்நிலையில் நிவர் புயல் மற்றும் புரெவி புயல்களால் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பாழானது. மூட்டைகளில் இருந்தபடியே நெல்முளைவிட்டு வளர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகினர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலை கிடைக்காததால் வட்டிக்கு பணம் வாங்கி தங்களின் விவசாய நிலங்களில் விவசாயம் செய்து விளைவித்த நெல் மூட்டைகளை நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக கொண்டு சென்றால் அதிகாரிகள் அதனை வாங்க அலட்சியம் காட்டுகின்றனர்.

இதனால் நாங்கள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து எங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே கலெக்டர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மழையால் சேதமடைந்த நெல் மூட்டைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com