

புதுடெல்லி:
குடியரசு தினத்தன்று, வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் டிராக்டர்கள் பேரணி நடத்தினர். அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட பாதையை விட்டு விலகிச் சென்று, வன்செயலில் இறங்கினர்.
போலீசாருக்கும், அவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. 50 போலீசார் காயம் அடைந்தனர்.
டெல்லி செங்கோட்டையில் சிலர் ஏறி, அதன் குவிமாடங்களில் தங்களது கொடிகளை ஏற்றினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வன்முறை தொடர்பாக டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துகின்றனர். இதற்கு மத்தியில் டெல்லி செங்கோட்டைக்கு தடயவியல் நிபுணர்கள் குழு நேற்று வந்து ஆய்வு செய்ததுடன், ஆதாரங்களை சேகரித்தனர்.
ஏற்கனவே டெல்லி வன்முறை தொடர்பான ஆதாரங்கள் இருந்தால் அவற்றை தருமாறு பொதுமக்கள், ஊடகத்தினர் என பல தரப்பினருக்கும் போலீசார் வேண்டுகோள் விடுத்தது நினைவுகூரத்தக்கது.