

புதுடெல்லி:
டெல்லியில் இஸ்ரேலின் தூதரகம் அருகே கடந்த 29ம் தேதி குண்டு வெடித்தது. இது பயங்கரவாத தாக்குதல் என, இஸ்ரேலிய தூதரகம் உறுதி செய்தது. இந்நிலையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசினார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
இஸ்ரேல் தூதரகத்துக்கும், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதில், இந்தியா அதிகம் முக்கியத்துவம் அளித்து வருவதாக, பெஞ்சமின் நெதன்யாகுவிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும் இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதனை தொடர்ந்து இரு தலைவர்களும், கொரோனா நிலைமை பற்றி விவாதித்தனர். தொற்று பரவலை தடுக்க இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது பற்றியும் ஆலோசித்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.