மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு- சிறப்பு நீதிமன்றத்தில் பாஜக எம்பி பிரக்யா சிங் வைத்த கோரிக்கை

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஜக எம்பி பிரக்யா சிங் தாகூர் இன்று விசாரணைக்கு ஆஜரானார்.
பிரக்யா சிங் (கோப்பு படம்)
பிரக்யா சிங் (கோப்பு படம்)
Published on

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தின் மாலேகான் பகுதியில் உள்ள மசூதி அருகே கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி, இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர் (தற்போதைய பாஜக எம்பி), ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பையில் உள்ள என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில், இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது. 

வழக்கு விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து, விலக்களிக்க வேண்டும் என்ற பிரக்யா சிங்கின் கோரிக்கையை என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தையடுத்து அவர் நேரில் ஆஜராகிறார்.

இந்நிலையில் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விசாரணைக்கு ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி பிரக்யா சிங் தாகூர் எம்பி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் விசாரணைக்கு ஆஜராகினர். 

அப்போது வழக்கு விசாரணை நடைபெறும் ஒவ்வொரு நாளும் நேரில் ஆஜராவதில் இருந்து  தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என பிரக்யா சிங் தாகூர் கேட்டுக்கொண்டார். உடல்நிலை பாதிப்பு மற்றும் பாதுகாப்பை காரணம் காட்டி இந்த கோரிக்கையை அவர் முன்வைத்தார்.

இது தொடர்பாக மனு அளிக்கும்படி கூறிய நீதிமன்றம், விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. அத்துடன் குண்டுவெடிப்பு வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com