வட தமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்க வாய்ப்பு- தமிழ்நாடு வெதர்மேன்

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், வட தமிழகத்தில், 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்க வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். #TNRains #TamilNaduWeatherman #RedAlert
வட தமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்க வாய்ப்பு- தமிழ்நாடு வெதர்மேன்
Published on

தனியார் வானிலை ஆய்வு ஆர்வலரான பிரதீப் ஜான், தமிழ்நாடு வெதர்மேன் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு, வடமேற்காக நகர்ந்து, கடலூர் பகுதியை நோக்கி 21-ம் தேதி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் காற்று பலமாக வீசாது, இது நாளை நிலப்பகுதி அருகே வரும்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா என்பதை உறுதியாகக் கூற இயலாது. ஆனால் அதற்கான சூழல்கள் சாதகமாக இருக்கின்றன. அது ஒருவேளை வலுவிழந்த புயலாக இருந்தால்கூட, வியப்படையக்கூடாது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு நோக்கி மேகக்கூட்டங்களை இழுத்துச் செல்லும். இதன் காரணமாக வடதமிழகத்தில் நல்ல மழை பெய்யும்.

கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரி மாநிலம் ஆகியவற்றில் மிக, மிக கனமழை பெய்யும். காரைக்கால், தஞ்சை, நாகை, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், சென்னை, திருவண்ணாமலை, அதை ஒட்டிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்.

வடதமிழகத்தில் பெய்யும் இந்த மிக கனமழையால், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடக்கூடும். ஏனென்றால், வடதமிழகத்தில் தீவிரமான மழை பொழிவு இருக்கும்.

சென்னையில் இன்று முதல் மிதமான மழை ஆங்காங்கே இடைவெளி விட்டு பெய்யக்கூடும். இன்று இரவு முதல் கனமழை பெய்யும். நாளை காலையில் மீண்டும் மழை பெய்யும், இந்த மழை 22-ம் தேதி வரை நீடிக்கும். 23-ம் தேதியில் இருந்து மழை படிப்படியாகக் குறையும்.

சென்னையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் 850மிமீ மழை சராசரியாகப் பெய்யும், ஆனால், தற்போதுவரை 225 மிமீ மழை பதிவாகியுள்ளது. அடுத்த 3 நாட்கள் சென்னைக்கு மிக முக்கியமானது. இந்த மழையை சென்னை தவறவிடாது.

நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் வீசப்படும் காற்றை கஜா புயலோடு ஒப்பிட முடியாது. இது கடற்கரைப் பகுதியை கடக்க ஒரு நாள் ஆகும். இது நிலப்பகுதியை அடையும் போது வலுவடையவும் வாய்ப்புள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்பது உறுதியாகியுள்ளது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறலாம். இதனால், 50 முதல் 60 கி.மீ வரை வடதமிழக மாவட்டங்கள், கடலூர், புதுச்சேரியில் காற்று வீசக்கூடும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com