ஐடி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி

சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஐடி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஐடி பணியாளர்கள் (கோப்பு படம்)
ஐடி பணியாளர்கள் (கோப்பு படம்)
Published on

தமிழக அரசு சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு கொரோனா நோய் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால் தமிழ்நாட்டில் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் நாட்டிலேயே அதிகமாகவும் நோய் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக் குறைவாகவும் இருந்து வருகிறது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு, ஊரடங்கு உத்தரவை 25.03.2020 முதல் அமல்படுத்தியதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, கொரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் 31.07.2020 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே பல பணிகளுக்கு அனுமதி அளித்து பல்வேறு கட்டுப்பாடுகளுடனும் தளர்வுகளுடனும் இந்த ஊரடங்கு தற்போது நடைமுறையில் உள்ளது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் பணியாளார்கள் பல்வேறு கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். தற்போது உள்ள நடைமுறைபடி பணியாற்றுவதில் உள்ள சிரமத்தினை தெரிவித்தார்கள்.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் பணியாளர்களின் சிரமத்தை களையும் வகையில் பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர (Except Containment Zones) மற்ற பகுதிகளில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள், 50 விழுக்காடு பணியாளர்களுடன் 13.07.2020 முதல் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

எனினும், இதில் 90 விழுக்காடு பணியாளர்கள் அந்நிர்வாகம் ஏற்பாடு செய்யும் பொது போக்குவரத்து வசதிகளை மட்டுமே உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் முடிந்த வரையில்,தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய ஊக்குவிக்க வேண்டும்.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் பணியாளர்கள் வீட்டிலும் பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில் முககவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை தவறால் கடைபிடித்து அவசிய தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்து அரசுக் முழு ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com