

விழுப்புரம் கண்டமானடியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-
காட்டில் நரி செய்யும் சூழ்ச்சி போன்று நாட்டிலும் பலர் சூழ்ச்சி செய்கின்றனர். எனவே, கட்சி தொண்டர்கள் ஒரே அணியில் இருந்து எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கவேண்டும். அ.தி.மு.க. ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது. சூழ்ச்சி ஒருபோதும் வெற்றி பெறாது.
மத்திய அரசுடன் இணக்கமாக நாம் செயல்படுவதாக விமர்சனம் செய்கின்றனர். மக்களின் நலனுக்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுகிறோம்.
விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த மக்கள் இதன்மூலம் பயன்பெறுவார்கள். விழுப்புரத்தில் ரூ.198 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையாட்டி, காய்கனிகளால் அமைக்கப்ப்டட எம்ஜிஆர் திருவுருவம், புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டார். எம்.ஜி.ஆர். திருவுருவப்படத்தை திறந்து வைத்தார். மேலும், பல்வேறு அரசு துறைகளைச் சார்ந்த முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.