

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எழும்பூரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு அப்பகுதியை சீரமைத்து, சி.பா.ஆதித்தனார் சிலை அமைந்துள்ள பீடத்தை சுற்றியுள்ள போக்குவரத்துத் தீவை அழகுபடுத்தி, எழிலார்ந்த பகுதியாக மாற்றியமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்து, 29.12.2015 அன்று மாமன்றம் ஒப்புதல் வழங்கியது.
இப்பணிக்காக ஒரு விரிவான வரைபடம் தயாரிக்கப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு 16.6.2017 அன்று
ஒப்பந்ததாரர் இறுதி செய்யப்பட்டார். ஆதித்தனார் சிலையை தினத்தந்தி நிறுவனமே இதுவரை பராமரித்து வந்ததனால்,
இப்பணிகள் நிறைவடையும் வரை, சிலையை பாதுகாப்பாக வைப்பதற்கு 4.5.2017 அன்று தினத்தந்தி பத்திரிகை நிறுவனத்தினரிடம் பெருநகர சென்னை மாநகராட்சியால் கேட்டுக் கொள்ளப்பட்டது.
26.5.2017 அன்று சிலை முறையாக அகற்றப்பட்டு தினத்தந்தி பத்திரிகை நிறுவனத்தினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் போக்குவரத்து தீவைப் மேம்படுத்தும் பணி 13.9.2017 அன்று பெருநகர சென்னை மாநகராட்சியால் துவக்கப்பட்டது.
இதனிடையே வரும் 27.9.2017அன்று சி.பா.ஆதித்தனாரின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில், அவ்விடத்தில் சிலையை அமைக்க ஏதுவாக கான்கிரிட் அடித்தளத்தினை விரைவாக அமைத்து தருமாறு நேற்று (13.9.2017) தினத்தந்தி நிர்வாகத்தினர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். அவர்களின் கோரிக்கையை ஏற்று, ஆதித்தனார் சிலையை அதே இடத்தில் மீண்டும் நிறுவ பெருநகர சென்னை மாநகராட்சி கான்கிரிட் அடித்தளமும், பீடமும் அமைத்து வருகிறது.
அன்னாரின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு ஏதுவாக, இப்பணிகள் 20.9.2017-க்குள் விரைந்து முடிக்க
பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். பின்னர், சிலை அமைந்துள்ள பீடத்தை சுற்றியுள்ள
பகுதியினை மேலும் அழகுபடுத்தி போக்குவரத்து தீவு அமைக்கும் பணிகள் அனைத்தும் டிசம்பர் மாத இறுதிக்குள்
முடிக்கப்படும்.