

பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, சமீபத்தில் சென்னை வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, அரசியல் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு ராகுல் பதில் அளித்தார். ஆனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, கல்லூரி மாணவிகளை வைத்து நிகழ்ச்சி நடத்தியதாக ராகுல் மீது பாஜக புகார் கூறியது.
இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்ச்சியை நடத்தியதில் தேர்தல் விதிமீறல் இல்லை. கல்லூரி நிர்வாகம் சார்பில் முறையான அனுமதி பெற்றே நிகழ்ச்சி நடத்தப்பட்டிருப்பதாக, மாவட்ட தேர்தல் அதிகாரி விசாரித்து அறிக்கை தந்துள்ளார்.
தேர்தலையொட்டி இதுவரை நடைபெற்ற வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ 6.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.