ஆப்கானிஸ்தான்: தலிபான் பயங்கரவாதிகளின் இரட்டை தாக்குதலில் 48 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் இன்று நடத்திய இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் மொத்தம் 48 பேர் உயிரிழந்தனர்.
குண்டு வெடிப்பு நடந்த பகுதி
குண்டு வெடிப்பு நடந்த பகுதி
Published on

காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டு மேற்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. சில பகுதிகளை கைப்பற்றி அங்கு உள்ளூர் வரிவிதிப்பு உள்ளிட்ட நிர்வாகங்களை தங்கள் வசப்படுத்தியுள்ள தலிபான்கள் போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் தற்கொலைப்படை தாக்குதல்களையும் நடத்தி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் அதிபர் பதவிக்கு வரும் 28-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பர்வான் மாகாணத்தில் உள்ள சரிக்கார் நகரத்தில் அதிபர் அஷ்ரப் கானி இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அங்கு ஒரு பொதுக்கூட்டத்தில் அவர் பேசத் தொடங்கியபோது அப்பகுதியில் இருந்த சோதனைச்சாவடிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டுகளை திடீரென வெடிக்கச் செய்தார். இதில் 26 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். 42- க்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் நடைபெற்ற சில நிமிடங்களில் தலைநகர் காபுலில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகில் மற்றொரு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர். மேலும், 38 பேர் படுகாயமடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவங்களில் இன்று ஒரே நாளில் மட்டும் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com