சிரியா: ரக்கா நகரை விட்டு ஐ.எஸ். தீவிரவாதிகள் ஓட்டம் - பலரை மனித கேடயங்களாக பிடித்து சென்றனர்

சிரியாவின் ரக்கா நகரை கைப்பற்ற ராணுவம் நடத்திவரும் தாக்குதலுக்கு பயந்து அங்கிருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் அனைவரும் தப்பிச் சென்று விட்டதாக தெரியவந்துள்ளது.
சிரியா: ரக்கா நகரை விட்டு ஐ.எஸ். தீவிரவாதிகள் ஓட்டம் - பலரை மனித கேடயங்களாக பிடித்து சென்றனர்
Published on

டமாஸ்கஸ்:

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சியை அகற்ற நடைபெற்று வரும் ஆயுதப் புரட்சி மற்றும் அங்குள்ள போராளி குழுக்களுக்கு இடையில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் சுமார் 3 லட்சம் மக்கள் பலியாகியுள்ளனர்.

இதற்கிடையில், சிரியாவின் சில முக்கிய நகரங்களை ஆக்கிரமித்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களை தீர்த்துகட்டும் பணியில் அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ரஷியா நாடுகளின் விமானப் படைகள் அவ்வப்போது வான்வழி தாக்குதலில் ஈடுபடுகின்றன.

இந்நிலையில், ரக்கா நகரில் முகாமிட்டுள்ள ஐ.எஸ்.தீவிரவாதிகளை குறிவைத்து அந்நகரின் அமெரிக்க போர் விமானங்களின் துணையுடன் சிரியா ராணுவம் உச்சகட்ட தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு பயந்து ஐ.எஸ். தீவிரவாதிகளில் பலர் ஓட்டம் பிடித்துள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 100 தீவிரவாதிகள் சரண் அடைந்ததாக நேற்று சிரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்நிலையில், அங்கிருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் அனைவரும் ரக்கா நகரைவிட்டு வெளியேறி விட்டதாகவும், பொதுமக்களில் சிலரை அவர்கள் மனித கேடயங்களாக பிடித்துச் சென்றதாகவும் இன்று செய்திகள் வெளியாகியுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com