

டமாஸ்கஸ்:
சிரியா-இஸ்ரேல் எல்லைப்பகுதியில் ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற சிரியா போராளிகள் பலர் பதுங்கியுள்ளனர். இவர்கள் அவ்வப்போது இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த போராளிகளை வேட்டையாட இஸ்ரேல் விமானப்படைகள் தாக்குதல் நடத்துவதுண்டு.
அவ்வகையில், இன்று அதிகாலை சிரியாவின் தென்பகுதியான குனெய்ட்ரா அருகே சிரியா நாட்டின் ராணுவத்தளங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் 7 வீரர்கள் காயமடைந்ததாகவும் சிரியா அரசு குற்றம்சாட்டியுள்ளது.
முன்னதாக, நேற்று இஸ்ரேல் நாட்டின் கோலன் ஹெய்ட்ஸ் அருகே சிரியாவில் இருந்து வீசப்பட்ட ஏவுகணைகளுக்கு பதிலடி தரும் வகையில் இன்றைய தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் அரசு குறிப்பிட்டுள்ளது.