மரண தண்டனை அவசர சட்டம் - உண்ணாவிரதத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்

பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை விதிக்க சட்டம் இயற்ற வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த ஸ்வாதி மாலிவால் இன்று தனது உண்ணாவிரத்தை வாபஸ் பெற்றுள்ளார். #SwatiMaliwal
மரண தண்டனை அவசர சட்டம் - உண்ணாவிரதத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
Published on

புதுடெல்லி:

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை, ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது உள்ளிட்ட கொடூரமான சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுபோன்று பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் டெல்லி ராஜ்காட்டில் கடந்த 13-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

சிறார் பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டதிருத்தத்திற்கு நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனை அடுத்து, இந்த அவசர சட்டம் அமலான பின்னர் உண்ணாவிரத்தை கைவிடுவதாக ஸ்வாதி மாலிவால் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்திருந்த நிலையில், அந்த சட்டம் அமலாகியது. இதனை அடுத்து, பழச்சாறு அருந்தி தனது 10 நாள் உண்ணாவிரத போராட்டத்தை ஸ்வாதி மாலிவால் இன்று முடித்துக்கொண்டார். #SwatiMaliwal 

X

Maalai Malar
www.maalaimalar.com