

புதுடெல்லி:
இந்திய எல்லையில் பாகிஸ்தன் படையினர் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதன் காரணமாக பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே இந்தியாவில் சிகிச்சை பெற வருவதில் பல நோயாளிகளுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. ஆனாலும், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் பைசலாபாத் பகுதியை சேர்ந்த மோஷின் என்பவர், தனது அத்தை பர்சானா இஜாசுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு இந்தியா வருவதற்கான மருத்துவ விசா வழங்க வேண்டும் என சுஷ்மாவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து, வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பர்சானா இஜாஸ் இந்தியா வருவதற்கு விசா வழங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் கூறுகையில், பாகிஸ்தானை சேர்ந்த பர்சானா இஜாஸ் என்ற பெண்ணுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக விசா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.