

மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் உள்ளிட்ட பகுதிகளை பிரித்து கூர்காலாந்து என்ற பெயரில் தனி மாநிலம் அமைக்கக்கோரி கூர்கா ஜனமுக்தி மோர்ச்சா (ஜி.ஜே.எம்.) அமைப்பினர் கடந்த 12-ந்தேதி முதல் காலவரையற்ற முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளதுடன், அங்கு அடிக்கடி வன்முறையும் வெடித்து வருகிறது. இதில் ஏராளமான போலீசார் மற்றும் பொதுமக்கள் காயமடைந்து உள்ளனர்.
டார்ஜிலிங் நகரில் 14-வது நாளாக போராட்டம் இன்றும் நீடித்தது. தெருக்களில் மக்கள் பேரணியாக சென்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் போலீஸ் வாகனத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அலாக்ரா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான கூர்கா படையினர் தீ வைத்தனர் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேபோன்று ரம்மம் நீர்மின்திட்டத்திற்கு சொந்தமான பத்துக்கும் அதிகமான வாகனங்களில் தீ வைத்து, அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர்.