முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியின் தேக்கடி ஆனைவாசல் பகுதியில் வாகன நிறுத்தம் கட்டும் பணியில் கேரள அரசு ஈடுபட்டது. அந்த இடம் தமிழக அரசுக்கு சொந்தமானது என, சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதிகள் தமிழகத்திற்கு 999 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்டிருப்பதால் அதில் கட்டுமானப் பணிகளை அனுமதிக்கக்கூடாது என்று தமிழக அரசு வாதிட்டது. இவ்வழக்கை விசாரித்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தமிழகத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கியதுடன், தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது.
‘கேரளா அரசு வாகன நிறுத்தம் அமைக்க, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால், வன பாதுகாப்பு சட்டத்தில் அனுமதி பெற தேவையில்லை. எனவே, கேரளா அரசு வாகன நிறுத்தம் அமைக்க தடையில்லை’ என தீர்ப்பில் கூறப்பட்டது.
பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது.