

புதுடெல்லி:
விசாரணையில் உள்ள முக்கிய பிரச்சினைகள் பற்றி பேச மந்திரி, அரசு ஊழியர்களுக்கு கருத்து சுதந்திரம் உள்ளதா? என சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்ட அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் அருகே நெடுஞ்சாலையில் ஒரு தாயும், மகளும் கூட்டாக கற்பழிக்கப்பட்டனர். பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை ‘அரசியல் சதி’ என்று அப்போதைய மந்திரி அசம் கான் தெரிவித்தார்.
அதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி, கற்பழிக்கப்பட்ட பெண்ணின் கணவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின்போது, அசம் கான் மன்னிப்பு கோரினார்.
இருப்பினும், விசாரணையில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து மந்திரிகள் கருத்து கூறலாமா? என்று மூத்த வக்கீல்கள் பாலி நாரிமன், ஹரிஷ் சால்வே ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, மந்திரிகளோ, அரசு ஊழியர்களோ இப்படி பேசலாமா? அதற்காக தங்களுக்கு கருத்து சுதந்திரம் இருப்பதாக அவர்கள் கூற முடியுமா? என்பது பற்றி ஆய்வு செய்ய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்படுவதாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமை யிலான அமர்வு கூறியது.