

மும்பை:
மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து சுமார் 270 கி.மீட்டர் தொலைவில் உள்ள மலேகானில் கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி ரம்ஜான் தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்தவர்கள் மீது இரட்டை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்த வழக்கை முதலில் பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரித்தது. இதில், லெப்டினண்ட் கலோனல் ஸ்ரீகாந்த் புரோஹித், மற்றும் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்டோர் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றனர். 2008-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சாத்வி பிரக்யா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். 2009-ம் ஆண்டு மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் இவர்களை குற்றவாளிகளாகச் சேர்த்தது.
அதன்பிறகு தேசிய புலனாய்வு முகமைக்கு இந்த வழக்கு 2011-ல் மாற்றப்பட்டது. பிரசாத் புரோகித் உள்ளிட்ட 10 நபர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
இதையடுத்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி பிரசாத் புரோகித் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த மும்பை நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
இந்நிலையில், கடந்த 17-ஆம் தேதி புரோகித் சார்பில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், பழிவாங்கும் அரசியல் நடவடிக்கை காரணமாக ஒன்பது ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறேன். எனவே, ஜாமீன் வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.கே.அகர்வால் மற்றும் நீதிபதி ஏ.எம்.சப்ரே ஆகியோர் அடங்கிய பெஞ்ச், புரோகித்துக்கு ஜாமீன் அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது. இந்த
ஜாமீனுக்குரிய நிபந்தனைகளை அவர் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.