தேர்தல் ஆதாயத்துக்காக மதத்தை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

தேர்தல் ஆதாயத்துக்காக அரசியல் கட்சிகள் மதத்தை பயன்படுத்துவதை தடுக்க உத்தர விடகோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. #SupremCourt #Religion
தேர்தல் ஆதாயத்துக்காக மதத்தை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
Published on

புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட்டு வக்கீலும், பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவருமான அஸ்வினி உபாத்யாய் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தங்கள் ஆதாயத்துக்காக மதத்தை தவறாக பயன்படுத்துகின்றன. இதேபோல் வேட்பாளர்களும் மதத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். இந்த போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் மதசார்பின்மை, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு பாதிக்கப்படுகிறது. மேலும் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாக நடைபெறுவதையும் இது பாதிக்கிறது.

இது தொடர்பான திருத்த மசோதா கடந்த 1994-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் 1996-ம் ஆண்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால் அந்த மசோதா காலாவதியாகி விட்டது. ஆனால் அதன்பிறகு அந்த மசோதாவை கொண்டு வர தேர்தல் கமிஷன் யோசனை தெரிவித்த போதிலும், அரசாங்கத்தின் தரப்பில் அதுதொடர்பான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே தேர்தலில் போட்டியிடும் கட்சிகளும், வேட்பாளர்களும் மதத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கும், தேர்தல் கமிஷனுக்கும் உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனு அடுத்த மாதம் (ஜூலை) 4-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.  #SupremCourt #Religion #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com