சசி தரூருக்கு முன்ஜாமின் வழங்க சிறப்பு விசாரணை குழு கடும் எதிர்ப்பு

மத்திய முன்னாள் மந்திரி சசி தரூருக்கு முன் ஜாமின் வழங்க சிறப்பு விசாரணை குழு எதிர்ப்பு தெரிவித்ததால் தீர்ப்பை நாளை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #ShashiTharoor #SunandaPushkar
சசி தரூருக்கு முன்ஜாமின் வழங்க சிறப்பு விசாரணை குழு கடும் எதிர்ப்பு
Published on

புதுடெல்லி :

மத்திய முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசி தரூர்(61), 2 முறை திருமணமாகி விவாகரத்தான நிலையில், காஷ்மீர் தொழில் அதிபர் சுனந்தா புஷ்கரை(52) கடந்த 2010-ம் ஆண்டு, ஆகஸ்டு 22-ம் தேதி காதல் திருமணம் புரிந்தார்.

ஆனால், திடீரென சசிதரூருடன் பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெஹர் தரார் இணைத்து பேசப்பட்டார். சசி தரூர்-சுனந்தா மண வாழ்வில் அவர் புயலாக நுழைந்ததாகவும், இதனால் கணவன்-மனைவி இருவரிடையே சண்டைகள் தொடர்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள லீலா பேலஸ் என்ற 5 நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தபோது மர்மமான முறையில் சுனந்தா புஷ்கர் இறந்து கிடந்தார். இந்த மரணம் தொடர்பாக பெரும் சர்ச்சைகள் எழுந்தன.

இதற்கிடையில், சுனந்தா புஷ்கர் இறப்பதற்கு 9 நாட்களுக்கு முன் சசிதரூருக்கு மின்னஞ்சல் மற்றும் சமூக வலைதளம் மூலம் தகவல் அனுப்பி இருப்பதாகவும் அதில், வாழ்வதற்கு விருப்பம் இல்லை என்றும், இறப்பதற்காக பிரார்த்தனை செய்வதாகவும் எழுதப்பட்டுள்ளது என்று டெல்லி நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்திருந்தனர்.

இவ்வழக்கில் சசி தரூர் மீது போலிசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர் மேலும், ஜூலை  7-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சசி தரூருக்கு டெல்லி பெருநகர தலைமை மாஜிஸ்திரேட் சமர் விஷால் சம்மன் அனுப்பியிருந்தார்.

ஆனால், சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் முன் ஜாமின் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நேற்று சசி தரூர் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் முனிலையில் சசி தரூரின் முன் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், சசி தரூருக்கு முன் ஜாமின் அளித்தால் அவர் நாட்டை விட்டு தப்பி செல்ல கூடும் எனவே அவருக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது என வழக்கை கையாளும் சிறப்பு விசாரணை குழு கடும் எதிப்பு தெரிவித்தது.

சிறப்பு விசாரணை குழுவின் எதிர்ப்பு காரணமாக சசி தரூரின் முன் ஜாமின் தொடர்பான உத்தரவை நீதிபதி நாளை ஒத்திவைத்துள்ளார். #ShashiTharoor #SunandaPushkar

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com