

சூலூர்:
கோவை மாவட்டம் சூலூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் கனகராஜ். அ.தி.மு.க. அம்மா அணியை சேர்ந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அணி மாறி செல்லப்போவதாக மிரட்டல் விடுத்தார்.
இதன்பின்னர் திருப்பூர் சாமளாபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை எதிர்ப்பு போராட்டத்தின்போது இவர் சம்பவ இடத்தில் இருந்து புறப்பட்ட பிறகே போலீசார் தடியடி நடத்தினர் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இதனால் சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ் எப்போதும் பரபரப்புக்கு பெயர் போனவர் என மக்கள் கூறி வந்தனர்.
சூலூர் கனகராஜ் எம்.எல்.ஏ.வின் வீடு நெகமத்தை அடுத்த வளம் பச்சேரி பகுதியில் உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் கட்டியிருந்த 2 மாடுகளை மர்ம கும்பல் திருடி சென்று விட்டார். இன்று காலை கனகராஜ் எம்.எல்.ஏ. பார்த்த போது மாடுகள் திருட்டு போய் இருந்ததை கண்டு திடுக்கிட்டார்.
இதுபற்றி நெகமம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே கனகராஜ் எம்.எல்.ஏ. வீட்டில் கண்காணிப்பு கேமிரா உள்ளது. இதில் மாட்டை திருடி சென்ற கொள்ளையர்களின் உருவம் பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.