

சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் துணை முதல் மந்திரியாக பதவி வகித்தவர் சுக்பீர் சிங் பாதல். சிரோண்மணி அகாலி தளம் கட்சியின் தலைவராகவும் உள்ளார். இவர் நேற்று நன்கியானா சாஹிப் குருத்வாராவுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரது பாதுகாப்பு வாகனத்தை அதிருப்தியாளர்கள் சிலர் சூழ்ந்தனர். அவர்கள் சுக்பீர் சிங் பாதலுக்கு கருப்பு கொடி காட்டினர். அதில் ஒருவர் சுக்பீர் சிங் பாதல் இருந்த வாகனத்தின் மீது ஷூவையும், கல்லையும் எறிந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, சுக்பீர் சிங் பாதல் மீதான தாக்குதலுக்கு சிரோண்மணி அகாலி தளம் கண்டனம் தெரிவித்தது. போலீசார் உதவியுடன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என குற்றம் சாட்டியது.
முன்னாள் துணை முதல் மந்திரி சென்ற வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியது பஞ்சாப்பில் பரபரப்பை ஏற்படுத்தியது. #SukhbirSinghBadal