

காபூல்:
ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பாரா மாகாணத்தில் இருக்கும் சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் இன்று திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப்படை வீரர்கள் 11 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேய உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதல் நடந்த பாரா மாகாண கவர்னரின் செய்தித்தொடர்பாளர் முகமது நாசர் மேஹ்ரி ஊடகங்களிடம் கூறுகையில், பாலா பலக் மாவட்டத்தின் சோதனைசாவடி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பிறகு பாதுகாப்புப்படை எதிர்த்தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், 13 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவித்தார்.
மேலும், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்காத நிலையில், இந்த தாக்குதலை நடத்தியது தலிபான் இயக்கம் தான் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.