சோமாலியாவில் போலீஸ் நிலையம் மீது தற்கொலைப்படை தாக்குதல் - 6 பேர் உடல் சிதறி பலி

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் ஷபாப் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மொகாதிசு:

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் ஷபாப் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் அங்கு ராணுவ வீரர்கள், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகளை குறிவைத்து தொடர் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தலைநகர் மொகாதிசுவில் உள்ள வாபெரி மாவட்டத்தில் போலீஸ் நிலையம் ஒன்று உள்ளது. இந்த போலீஸ் நிலையம் நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்போது பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை ஓட்டி வந்து போலீஸ் நிலையத்தின் நுழைவாயில் மீது மோதி வெடிக்கச் செய்தனர்.

அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அந்தப் பகுதியே அதிர்ந்தது. அங்கு கரும்புகை மண்டலம் உருவானது. இந்த குண்டு வெடிப்பில் வாபெரி மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரி மற்றும் மாவட்ட போலீஸ் துணை தலைமை அதிகாரி ஆகிய 2 பேர் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் பல போலீசார் படுகாயமடைந்தனர். இந்த கொடூரத் தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இதனிடையே போலீஸ் நிலையம் மீது நடத்தப்பட்ட இந்த தற்கொலைப் படை தாக்குதலுக்கு சோமாலியா பிரதமர் முகமது உசேன் ரோபிள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அவர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com