நாகர்கோவிலில் லஞ்ச புகாரில் சிக்கிய சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

லஞ்ச புகாரில் சிக்கிய சப்-இன்ஸ்பெக்டரை இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுத்துள்ளார்.
நாகர்கோவிலில் லஞ்ச புகாரில் சிக்கிய சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ஒருவர் திடீரென குமரி மேற்கு மாவட்ட போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

சப்-இன்ஸ்பெக்டரின் இடமாற்றத்திற்கு அவர் ஒரு வழக்கில் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரே காரணம் என்று கூறப்படுகிறது. இது போலீசார்  மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இடமாற்றம் செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் பல்வேறு வழக்குகளை   திறமையாக விசாரித்தவர் என பெயர் பெற்றவர்.

இவருக்கு இடமாற்றம் அளிக்கப்பட்டது ஏன்? என்பது பற்றி போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-

நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சந்திப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வேகமாக சென்றார். செல்போன் பேசியபடி அவர் வாகனம் ஓட்டியதால் அவரை போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் வழி மறித்து நிறுத்தினார்.

இதில் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அந்த வாலிபர், போக்குவரத்து போலீஸ்காரரை தாக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர், அந்த வாலிபரை கைது செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றார். பின்னர் அந்த வாலிபர் விடுவிக்கப்பட்டார்.

விடுவிக்கப்பட்ட வாலிபர் ஒரு தொழில் அதிபரின் மகன் ஆவார். வழக்கில் இருந்து வாலிபரை விடுவிக்க சப்-இன்ஸ்பெக்டர் ரூ.50 ஆயிரம் வரை லஞ்சம் வாங்கியதாக ரகசிய தகவல் வெளியானது. இது அரசல் புரசலாக உயர் அதிகாரிகளுக்கு தெரியவர அவர்கள் இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதன் பேரிலேயே சப்-இன்ஸ்பெக்டர் மீது இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com