சசிகலாவுக்கு அமைச்சர் வீட்டில் இருந்து சாப்பாடு- காய்கறி, பழங்களை ஆம்புலன்சில் அனுப்பிய சப்-இன்ஸ்பெக்டர்

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு அமைச்சர் வீட்டில் இருந்து சாப்பாடு, காய்கறி, பழங்களை ஆம்புலன்ஸ் மூலம் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சசிகலாவுக்கு அமைச்சர் வீட்டில் இருந்து சாப்பாடு- காய்கறி, பழங்களை ஆம்புலன்சில் அனுப்பிய சப்-இன்ஸ்பெக்டர்
Published on

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. சத்திய நாராயண ராவ் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதாக டி.ஐ.ஜி. ரூபா குற்றம்சாட்டி இருந்தார்.

இது குறித்து கர்நாடக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் பெங்களூரு மாநகர குற்றபிரிவு கூடுதல் கமி‌ஷனர் ரவி, மைசூர் சிறை சூப்பிரண்டு ஆனந்த் ரெட்டி ஆகியோர் தலைமையிலான உயர்மட்ட குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இவர்கள் முதல் கட்ட விசாரணை அறிக்கையை வருகிற வெள்ளிக்கிழமை (28-ந் தேதி) தாக்கல் செய்ய உள்ளனர். இந்த அறிக்கை தாக்கல் ஆன பிறகு சிறைத்துறை அதிகாரிகள் மீது சஸ்பெண்டு நடவடிக்கை பாய உள்ளது.

இந்த நிலையில் கர்நாடக போலீஸ் வட்டாரத்தில் நேற்று ஒரு மொட்டை கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டி.ஜி.பி. முதல் எஸ்.பி. வரை இந்த கடிதம் அனுப்பப்பட்டது.

அந்த கடிதத்தில் சிறைக் காவலர்கள் என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கடிதத்தில் எந்த கையெழுத்தும் இல்லை. அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

கர்நாடக மாநிலத்தில் தொழில் பாதுகாப்பு படை இயங்கி வருகிறது. இந்த படையில் முன்பு ஏட்டாகவும், தற்போது பதவி உயர்வில் சப்-இன்ஸ்பெக்டராகவும் உள்ள கஜராஜ மாகனூரு என்பவர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் பாதுகாப்பு பிரிவுக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.

ஆனால் இவர் அந்த பணியை மேற்கொள்ளாமல் சிறைத்துறை வி.ஐ.பி. களுக்கு உதவி செய்யும் பணியை செய்து வந்தார். சிறையில் உள்ள வி.ஐ.பி.களுக்கு வீட்டு உணவு சப்ளை, அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள், பழங்கள், ஆகியவற்றை சப்ளை செய்து வந்தார்.

கருப்பு பண பதுக்கலில் கைதான வீரேந்திரா, புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைத்த வழக்கில் கைதான கர்நாடக மாநில நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரி ஜெயச்சந்திரா, இரும்பு தாது வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கங்காராம் படேரியா ஆகியோருக்கு வேண்டிய உதவிகளை செய்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் சசிகலா பரப்பன அக்ரஹார சிறைக்கு வந்தது முதல் அவருக்கு வேண்டிய வசதிகளை சிறைத்துறை சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் மூலமாக செய்து வந்தார்.

ஓசூரை சேர்ந்த அமைச்சர் வீட்டில் இருந்து சாப்பாடு கொண்டு போய் கொடுத்தார். ஓசூரை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் ஆம்புலன்ஸ் மூலம் சசிகலாவுக்கு எடுத்து வரும் சாப்பாடு, காய்கறிகள், பழங்கள், மருந்து மாத்திரைகள் ஆகியவற்றை சிறைக்கு உள்ளே சென்று சசிகலாவுக்கு வழங்க உதவி செய்தார்.

சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள், கஜராஜமாக னூருவுடன் போனில் தொடர்பில் இருந்தனர். அவர் 3 செல்போன்களையும், 4 சிம்கார்டுகளையும் பயன்படுத்தினார்.


சசிகலாவுக்கு சமையல் செய்ய காய்கறிகள், பாத்திரங்கள் மற்றும் பொருட்களை 2 முறை ஆம்புலன்ஸ் மூலம் அவரே எடுத்து சென்று கொடுத்தார். இதற்காக அவருக்கு லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த பணத்தை வைத்து அவரது சொந்த ஊரான காவேரி மாவட்டம், ராணி பென்னூர் தாலுகா நாகனஹள்ளியில் 2 மாடி கட்டிடம் கட்டி உள்ளார். பெங்களூருவில் இவருக்கு 1200 சதுரடி வீட்டுமனை வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறையில் உள்ள வி.ஐ.பி.க்களை அவர்களது உறவினர்கள், நண்பர்கள் அடிக்கடி சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்தார். இதற்காக சிறை விதிகள் மீறப்பட்டுள்ளன. பார்வையாளர் கோப்பில் கையெழுத்திடாமல் சிறையில் உள்ள வி.ஐ.பிகளை அவர்களது உறவினர்கள் சந்தித்தனர்.

சசிகலா அரசியல் குறித்து விவாதிக்க ஒரு அறையையும் இவர் ஏற்பாடு செய்து கொடுத்தார். இது போல பல விதிமுறை மீறல்கள் சிறையில் நடந்துள்ளது.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த மொட்டை கடித விவகாரம் குறித்து கர்நாடக உளவு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் இவர் சஸ்பெண்டு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

அவர் மீது கர்நாடக லோக் ஆயுக்தா போலீசார் விரைவில் விசாரணை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அவரது வீடுகளிலும் விரைவில் சோதனை நடைபெற உள்ளது.

சசிகலாவுக்கு உதவிய சப்-இன்ஸ்பெக்டர் கஜராஜ மாகனூரு குறித்து ஏற்கனவே டெல்லி போலீசாரும் விசாரணை நடத்தி இது குறித்து மத்திய உள்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com