உதவி பேராசிரியர் மீது பாலியல் தொல்லை புகார் - ஒழுங்கு நடவடிக்கை குழுவின் விசாரணைக்கு வர மாணவி மறுப்பு

உதவி பேராசிரியர் மீது பாலியல் தொல்லை புகார் அளித்த மாணவி ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் விசாரணைக்கு அழைத்தபோது வரவில்லை.#ChennaiStudentharassment #AgriCollege
உதவி பேராசிரியர் மீது பாலியல் தொல்லை புகார் - ஒழுங்கு நடவடிக்கை குழுவின் விசாரணைக்கு வர மாணவி மறுப்பு
Published on

வாணாபுரம்:

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே வாழவச்சனூரில் உள்ள அரசு வேளாண்மை கல்லூரியில் சென்னையை சேர்ந்த மாணவி ஒருவர் படித்து வருகிறார். விடுதியில் தங்கி படிக்கும் தனக்கு, உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், மேலும் பாலியல் தொல்லைக்கு ஆதரவாக விடுதி காப்பாளர்களாக உள்ள கல்லூரி பேராசிரியைகள் ஆகியோர் செயல்பட்டதாகவும் புகார் கூறினார்.

இதற்கிடையில் புகார் கூறப்பட்ட உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் மற்றும் விடுதி காப்பாளர்களான பேராசிரியைகள் மாணவிக்கு எதிராக வாணாபுரம் போலீசில் புகார் அளித்தனர். புகாரில் மாணவியின் பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யாக ஜோடிக்கப்பட்டவை. எங்கள் பெயர்களுக்கு களங்கம் ஏற்படுத்தவே, இதுபோன்ற புகார்களை கூறி உள்ளார். கல்லூரியில் சக மாணவ, மாணவிகளுடைய ஐ.டி. கார்டுகள், பென்சில், பேனா மற்றும் ரப்பர் போன்ற பொருட்களை மாணவி திருடியுள்ளார். இதுபோன்று பல திருட்டு சம்பவங்களில் மாணவி ஈடுபட்டுள்ளார். கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக பொய் புகார் தெரிவித்த மாணவி மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளனர்.

இந்த புகார் குறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோவையில் இருந்து வந்த வேளாண்மை பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் சாந்தி மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழு கல்லூரி முதல்வர், பேராசிரியைகள், மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே, பாலியல் புகாருக்குள்ளான உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் மாணவி விடுதியை விட்டு வெளியேறி விட்டார். இந்த வேளாண்மை கல்லூரியில் தேர்வு நடைபெற்று வருவதினால், பாதிக்கப்பட்ட மாணவி நேற்று காலை போலீஸ் பாதுகாப்புடன் வந்து தேர்வு எழுதினார்.

நேற்று 2-வது நாளாக வேளாண்மை பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் சாந்தி மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்த கல்லூரிக்கு வந்தனர். அவர்கள் பாதிக்கப்பட்ட மாணவியை விசாரணைக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் அவர் வர மறுத்துவிட்டார்.

இதையடுத்து உதவி பேராசிரியர் தங்கபாண்டியன், அவருக்கு உதவியதாக கூறிய பேராசிரியைகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவியின் தோழிகள், மாணவிகள் ஆகியோரிடம் அவர்கள் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.  #ChennaiStudentharassment #AgriCollege

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com