சைக்கிள் வாங்குவதற்காக சேகரித்த பணத்தை வெள்ள நிவாரணத்துக்கு வழங்கிய மாணவி

சைக்கிள் வாங்குவதற்காக உண்டியலில் சேகரித்த பணத்தை வெள்ள நிவாரணத்துக்கு வழங்கிய மாணவியின் மனித நேயத்தை பாராட்டி அவருக்கு சைக்கிள் நிறுவனம் ஒன்று புது சைக்கிளை பரிசாக வழங்கியது.
சைக்கிள் வாங்குவதற்காக சேகரித்த பணத்தை வெள்ள நிவாரணத்துக்கு வழங்கிய மாணவி
Published on

குளச்சல்:

குமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்தவர் அப்துல் ஆசிம்(வயது48). கடந்த சில வருடங்களாக இவர் குடும்பத்துடன் நாகர்கோவிலில் வசித்து வருகிறார். இவரது மகள் சஜீரா பாத்திமா. 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த மாணவிக்கு உண்டியலில் பணம் சேரிக்கும் பழக்கம் உண்டு. கடந்த சில நாட்களாக இவர் சைக்கிள் வாங்க ஆசைப்பட்டு அதற்காக உண்டியலில் பணம் சேகரித்து வந்தார்.

கடந்த 2 வாரங்களுக்கு மேலாக கேரளாவில் பெய்த கன மழையில் பலர் வீடு, உடமைகளை இழந்து தவித்து உள்ளனர். இவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என நினைத்த சஜீரா பாத்திமா தான் சேகரித்து வைத்திருந்த பணத்தை எடுக்க உண்டியலை திறந்தார். அதில் ரூ. 600 சேர்ந்திருந்தது.

உடனே அவர் பெற்றோரின் அனுமதியுடன் ரூ.600ஐ கேரள மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தார். இந்த தகவல் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பரவியது. இதனை அறிந்த நாகர்கோவிலை சேர்ந்த தனியார் சைக்கிள் நிறுவனம் ஒன்று மாணவியின் மனித நேயத்தை பாராட்டி சைக்கிள் ஒன்றை பரிசாக வழங்கியது.

இதுகுறித்து மாணவி சஜீரா பாத்திமா(12) கூறுகையில், சிறு வயதில் இருந்தே சைக்கிள் வாங்க ஆசையாக இருந்தது. அதற்காக பெற்றோர் உறவினர்கள் தரும் காசுகளை சேமித்து வந்தேன்.

இந்த வேளையில் கேரளாவில் வெள்ளப்பெருக்கால் மக்கள் கஷ்டப்படுவதை பார்த்து எனக்கு கஷ்டமாக இருந்தது. நம்மால் முடிந்த உதவியை செய்ய பெற்றோரிடம் கூறினேன். மேலும் நான் சேமித்த ரூ.600ஐ வெள்ள நிவாரண நிதியாக அளித்தேன். இதனை எனது தந்தை பேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார். இதனை பார்த்து ஒரு சைக்கிள் நிறுவனம் நான் படித்த பள்ளியில் வந்து சைக்கிளை பரிசாக வழங்கினர் என்றார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com