

திண்டுக்கல்:
கொடைக்கானல் பெரியூர் பகுதியை சேர்ந்தவர் ராமன். கூலித்தொழிலாளி. அவருடைய மகள் வர்ஷா (வயது 14). இவள், திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு படித்து வந்தாள். இவள் அந்த பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தாள். நேற்று முன்தினம் இரவு விடுதிக்குள் புகுந்த பாம்பு ஒன்று வர்ஷாவை கடித்து விட்டது. இதையடுத்து அவளை ஆசிரியர்கள், மாணவிகள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவளை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே வர்ஷா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி விடுதியில் பாம்பு கடித்து, பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.