எக்ஸ்பிரஸ் பாதையில் மின்சார ரெயிலை இயக்கக்கோரி கூடுவாஞ்சேரியில் ரெயில் மறியல்

எக்ஸ்பிரஸ் பாதையில் இயக்கப்பட்ட மின்சார ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எக்ஸ்பிரஸ் பாதையில் மின்சார ரெயிலை இயக்கக்கோரி கூடுவாஞ்சேரியில் ரெயில் மறியல்
Published on

கூடுவாஞ்சேரி:

பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கடந்த 24-ந்தேதி காலை திருமால்பூர் மின்சார ரெயிலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த 5 பேர் தடுப்பு சுவரில் மோதி பலியானார்கள்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து எக்ஸ்பிரஸ் தண்டவாள பாதையில் இயக்கப்பட்டு வந்த திருமால்பூர் பாஸ்ட் மின்சார ரெயில் நிறுத்தப்பட்டது. அந்த ரெயில் மின்சார ரெயில்கள் செல்லும் தண்டவாள பாதையில் இயக்கப்பட்டது.

எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பாதையில் இயக்கப்படும் மின்சார ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழியும். குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் மட்டும் நிற்பதால் அலுவலகம் செல்பவர்கள் இந்த மின்சார ரெயிலில் அதிகமாக பயணம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் எக்ஸ்பிரஸ் பாதையில் இயக்கப்பட்ட மின்சார ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

இந்த நிலையில் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் இன்று காலை பயணிகள் திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். எக்ஸ்பிரஸ் பாதையில் மீண்டும் மின்சார ரெயில்களை இயக்கக்கோரி போராட்டம் நடத்தினார்கள்.

சென்னை நோக்கி வந்த காக்கிநாடா எக்ஸ்பிரஸ் ரெயிலையும், மின்சார ரெயிலையும் மறித்தனர். இதனால் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

பயணிகள் போராட்டம் காரணமாக புதுவை எக்ஸ்பிரஸ் ரெயில் சிங்கபெருமாள் கோவிலிலும், திருமால்பூர் ரெயில் மறைமலைநகரிலும் நிறுத்தப்பட்டன. மேலும் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியல் செய்தவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன் பிறகு பயணிகள் மறியலை கைவிட்டனர். இதைத் தொடர்ந்து வழக்கம்போல் மின்சார ரெயில் போக்குவரத்து நடந்தது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com