

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொடர்பாக பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மக்கள் அதிகாரம் அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ஹரிராகவன் மீது போராட்டத்தை தூண்டியதாக பல்வேறு காவல் நிலையங்களில் 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் அவருக்கு ஐகோர்ட் மதுரை கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஆனால், தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஹரிராகவன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தது சட்டவிரோதமானது என்றும் அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவரது மனைவி சத்தியபாமா ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தூத்துக்குடி கலெக்டர் நாளை (புதன்கிழமை) ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்திருந்தனர்.
அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, அவருக்கு நீதிபதிகள் அறிவுரைகள் வழங்கியதுடன், வக்கீல் ஹரிராகவன் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.