

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கு இன்று தலைமை நீதிபதி ஏ.கே.கோயல் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பாக வாதம் நடைபெற்றது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை தலைமை நீதிபதி, தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியிடம் ஒப்படைக்கலாம் என்று முடிவு செய்தார். இதனை தமிழக அரசும் ஏற்றுக்கொண்டது.
இதையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதிகள் சிவசுப்பிரமணியம், சந்துரு ஆகியோரின் பெயர்களை தலைமை நீதிபதி கோயல் பரிந்துரை செய்தார். இவர்களில் யாரிடம் வழக்கை ஒப்படைக்கலாம் என்பது குறித்து வாதம் நடைபெற்றது. அப்போது நீதிபதி சந்துரு இவ்வழக்கை விசாரிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. வேதாந்தா நிறுவன வழக்கறிஞரின் கருத்தை கேட்டபிறகு இந்த விஷயத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது.