குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை - கலெக்டரிடம், பழங்குடியின மக்கள் மனு

செம்மண்வயலில் குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம், பழங்குடியின மக்கள் மனு அளித்தனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

ஊட்டி:

ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தங்களது கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். அதன்படி நெல்லியாளம் அருகே உள்ள செம்மண்வயல் கிராமத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

செம்மண்வயல் காலனியில் பழங்குடியின மக்களுக்காக குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டப்படுகிறது. இங்கு சிமெண்டு, ஜல்லி, மண் போன்ற கட்டுமான பொருட்களை கொண்டு செல்லும் பாதை சேறும், சகதியுமாக உள்ளது. இந்த பாதையை சீரமைக்க நெல்லியாளம் நகராட்சியிடம் மனு அளித்தோம். மேலும் வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்க மின்கம்பங்கள் அமைக்கவும் கோரிக்கை விடுத்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பாதை சரியாக இல்லாததால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் அரசு திட்டத்தில் கட்டப்படும் எங்களது வீட்டு வேலை பாதிக்கப்பட்டு உள்ளதுடன், கால விரயம் மற்றும் பணம் விரயம் ஏற்படுகிறது. எனவே வீடுகளுக்கு செல்ல சரியான பாதை அமைக்கவும், மின்கம்பங்கள் அமைக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வீடுகள் கட்டும் பணியை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. ஊட்டி எல்க்ஹில் பகுதி மக்கள் கொடுத்த மனுவில், எல்க்ஹில் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு கழிப்பிட வசதி சரிவர இல்லை. நகராட்சி மூலம் கட்டப்பட்ட கழிப்பிடங்கள் பராமரிப்பின்றி காணப்படுகிறது. எனவே கழிப்பிடங்களை முறையாக பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com