நிர்மலாதேவி மீண்டும் அக்.4ந்தேதி ஆஜராக ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட் உத்தரவு

தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி மீண்டும் வருகிற 4 ந்தேதி ஆஜராக ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட் உத்தரவிட்டது.
நிர்மலாதேவி
நிர்மலாதேவி
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி கைதாகி, சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இவர் அந்த வழக்கு விசாரணைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜராகி வருகிறார்.

சமீப காலமாக கோர்ட்டில் நிர்மலாதேவி ஆஜராகும் போது, ஏதாவது ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறது. மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறிய அவர், சிகிச்சை எடுத்துக்கொண்டதாக தெரிவித்தார். ஏற்கனவே கோவிலுக்கு நேர்த்திக்கடனாக முடிகாணிக்கை செலுத்தி, மொட்டை தலையுடன் கோர்ட்டில் ஆஜராகி இருந்தார். கடந்த முறை ஸ்கூட்டரில் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதே போல் நேற்றும் அவர் ஸ்கூட்டரில்தான் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டுக்கு வந்தார். ஆனால், இப்போது 2-வது முறையாக மொட்டை தலையுடன் வந்திருந்தார். வழக்கில் இருந்து விடுதலையாக வேண்டி கோவிலுக்கு அவர் மீண்டும் முடிகாணிக்கை செலுத்தியதாக கூறப்படுகிறது.

இதே போல் இந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ள பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமியும் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி, வருகிற 4-ந் தேதி 3 பேரும் கண்டிப்பாக வக்கீல்களுடன் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து கோர்ட்டில் இருந்து வெளியே வந்த நிர்மலாதேவி, தலைக்கவசத்தை அணிந்து கொண்டு ஸ்கூட்டரில் புறப்பட்டுச் சென்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com