அமைதி திரும்பிய இலங்கை மண்ணில் 10 ஆண்டுக்கு பிறகு நடந்த மிகப்பெரிய குண்டுவெடிப்பு

அமைதி திரும்பிய இலங்கை மண்ணில் 10 ஆண்டுக்கு பிறகு நடந்த மிகப்பெரிய குண்டுவெடிப்பு அந்நாட்டை நிலைகுலைய செய்துள்ளது. #SriLankablasts #SriLankaEasterattacks
அமைதி திரும்பிய இலங்கை மண்ணில் 10 ஆண்டுக்கு பிறகு நடந்த மிகப்பெரிய குண்டுவெடிப்பு
Published on

சென்னை:

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக நடந்த மோதல் கடந்த 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. தனி நாடு கேட்டு இலங்கையில் போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பை உலக நாடுகளின் ஆதரவோடு இலங்கை அரசு வீழ்த்தியது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதி கட்ட போரில் கொல்லப்பட்டு விட்டதாகவும் இலங்கை அரசு அறிவித்தது.

இதன் பின்னர் இலங்கையில் அமைதி நிலவி வந்தது. கடந்த 10 ஆண்டுகளாக இலங்கையில் மிகப் பெரிய அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் இலங்கை அரசும் நிம்மதி பெருமூச்சு விட்டிருந்தது. விடுதலைப்புலிகளின் அமைப்பு முற்றிலுமாக ஒழித்துக்கட்டப்பட்டு விட்டதாக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்டு இருந்தாலும், நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இது சமீப காலமாக கொஞ்சம் தளர்த்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் யாரும் எதிர்பாராத வகையில் இலங்கையில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொடூர குண்டுவெடிப்பு சம்பவத்தில் புதிய தீவிரவாத அமைப்பு ஒன்று ஈடுபட்டுள்ளது. இது இலங்கையை மட்டுமின்றி, இந்தியா உள்ளிட்ட நாடுகளையும் கூடுதல் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

அதே நேரத்தில் இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு பின்னர் அமைதியாக வாழ்ந்து வந்த சிங்கள மக்களின் தூக்கம் தொலைந்துள்ளது. புதிய தீவிரவாத இயக்கம் தங்களது முதல் தாக்குதலிலேயே இலங்கையை நிலைகுலைய செய்துள்ளது.

இது அந்த நாட்டின் பாதுகாப்புக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே கருதப்படுகிறது. இதன் மூலம் இலங்கைக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது. அதில் இருந்து அந்நாடு எப்படி மீளப்போகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. #SriLankablasts #SriLankaEasterattacks

X

Maalai Malar
www.maalaimalar.com