

இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள 3 கிறிஸ்தவ தேவாலயங்கள், 3 ஓட்டல்கள் மற்றும் ஒரு குடியிருப்பு வளாகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று அடுத்தடுத்து நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதல்களில் 258 பேர் உயிரிழந்தனர். சுமார் 500 பேர் காயமடைந்தனர்.
இலங்கையில் இயங்கிவரும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்ற இந்த கொடூர தாக்குதல்கள் தொடர்பாக போலீசார் சுமார் 100 பேரை கைது செய்து விசாரித்தனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது.
தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி விஜித் மலால்கோடா தலைமையில் முன்னாள் போலீஸ் ஐ.ஜி. என்.கே.இலங்கக்கூன், சட்டம்-ஒழுங்கு அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜெயமன்னே ஆகியோரை கொண்ட சிறப்பு குழுவை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா அமைத்திருந்தார்.
அதன்படி அளிக்கப்பட்ட அறிக்கையில் ’கொழும்புவில் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம் என இந்திய அரசின் உளவுத்துறை எச்சரித்து இருந்ததை போலீசார் பொருட்படுத்தாமல் மெத்தனமாக இருந்தனர்’ என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சிறப்பு குழு விசாரணைக்கு அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தற்போது உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக இலங்கை அரசின் தகவல்துறை வெளியிட்ட அறிக்கையில்' புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு விசாரணை குழுவில் மேல்முறயீட்டு நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அரசு உயரதிகாரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.