இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு நெருக்கடி: கூட்டணி அரசில் இருந்து விலக வலியுறுத்தல்

மைத்ரி பால சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் சிலர் கூட்டணி அரசில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டுமென திடீரென போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு நெருக்கடி: கூட்டணி அரசில் இருந்து விலக வலியுறுத்தல்
Published on

கொழும்பு:

இலங்கையில் கடந்த 2015-ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடந்தது. அதில் அதிபராக இருந்த ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கை சுதந்திரா கட்சியை சேர்ந்த மந்திரி மைத்ரிபால சிறிசேனா யாரும் எதிர்பாராத நிலையில் எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளராக களம் இறங்கினார்.

தேர்தலில் அமோக வெற்றி பெற்று அதிபரானார். அதை தொடர்ந்து சுதந்திரா கட்சியை சிறிசேனாவிடம் ராஜபக்சே ஒப்படைத்தார். ஆனால் பாராளுமன்ற தேர்தலில் சுதந்திரா கட்சிக்கு தனிமெஜாரிட்டி கிடைக்கவில்லை. எனவே எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசு அதாவது கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது.

எனவே ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரம்சிங்கே பிரதமர் ஆனார். தற்போது 3-வது ஆண்டில் ஆட்சி சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் மைத்ரி பால சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் சிலர் திடீரென போர்க்கொடி உயர்த்தினர்.

தற்போதுள்ள கூட்டணி அரசில் இருந்து இலங்கை சுதந்திரா கட்சி வெளியேறி எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனால் அதிபர் சிறிசேனாவுக்கு ‘திடீர்’ நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இவருக்கு ராஜபக்சே ஆதரவாளர்கள் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு ஒரு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்க முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையே தனது கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டிய அதிபர் சிறிசேனா அதில் பேசினார். அப்போது இலங்கை அரசின் மீது சர்வதேச நாடுகள் சுமத்தும் மனித உரிமை மீறல், போர்க்குற்றம் போன்றவை கூட்டணி தேசிய அரசின் மூலம் தடுத்து நிறுத்தப்படும்’ என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com