

திசையன்விளை:
ஈஸ்டர் திருநாளன்று இலங்கையில் 3 கிறிஸ்தவ தேவாலயத்திலும், அதன் அருகில் உள்ள பகுதிகளிலும் குண்டு வெடித்து 200-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். உலகம் முழுவதும் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களில் இந்த நிகழ்ச்சிக்கு கண்டனம் தெரிவித்தும், பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, இடிந்தகரை, கூத்தன்குழி, பெருமணல், தோமையார் புரம், கூட்டப்புளி உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களில் கடற்கரையோரம் இன்று அனைத்து படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஒருவர் கூட மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் இன்று நெல்லை மாவட்ட கடற்கரை கிராமங்களில் மீன் விற்பனையும் நடைபெறாது.
இன்று மாலை உவரியில் மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலம் சென்று குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார். இதில் கிறிஸ்தவ பாதிரியார்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த சம்பவத்தை முன்னிட்டு மீனவ கிராமங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. #SriLankablasts