

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படை தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. விழாவில், கண்கவர் அணிவகுப்பு மரியாதை, விமானப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. ராணுவ தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி பதாரியா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய விமானப்படை விமானங்கள் குண்டு வீசி அழித்தன. அதன்பின்னர் 27-ந் தேதி, பாகிஸ்தான், தனது அதிநவீன ‘எப்-16’ ரக போர் விமானங்களை இந்தியாவில் தாக்குதல் நடத்த அனுப்பியது. அந்த விமானங்களை இந்திய விமானப்படை வீரர்கள் விரட்டியடித்தனர்.
அப்போது பாகிஸ்தானின் ‘எப்-16’ போர் விமானம் ஒன்றை இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார். பாலக்கோட் தாக்குதலில் 9வது படைப்பிரிவு மற்றும் அபிநந்தனின் 51வது படைப்பிரிவு ஈடுபட்டது.