

சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆசம்கான்.
பாராளுமன்ற தேர்தலில் இவர் உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.பி.ஆனார். ஆசம்கான் தேர்தல் பிரசாரத்தின்போது பா.ஜனதா வேட்பாளரும் நடிகையுமான ஜெயபிரதாவை ஆபாசமாக விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார். இதற்காக அவர் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து இருந்தது.
இதற்கிடையே ஆசம்கான் பாராளுமன்றத்தில் பா.ஜனதா பெண் எம்.பி.யை கண்ணியமற்ற முறையில் பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
பாராளுமன்ற மக்களவையில் முத்தலாக் தடை மசோதா குறித்து விவாதம் நடந்தது. அப்போது சபாநாயகர் ஓம்பிர்லா அவையில் இல்லை. இதனால் மக்களவை தலைவர் இருக்கையில் பா.ஜனதா பெண் எம்.பி.யும், துணை சபாநாயகருமான ரமாதேவி அமர்ந்து இருந்தார்.
அவரது இந்த கண்ணியமற்ற பேச்சுக்கு பாராளுமன்றத்தில் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கட்சி பேதமின்றி பெண் எம்.பி.க்கள் வலியுறுத்தினார்கள்.
இந்த விவகாரங்கள் குறித்து பல்வேறு கட்சி எம்.பி.க்களுடன் சபாநாயகர் ஓம்பிர்லா ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்துக்கு பிறகு பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி கூறியதாவது:-
சர்ச்சை தொடர்பாக சமாஜ்வாடி கட்சி எம்.பி. ஆசம்கான் திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான உத்தரவு அவருக்கு அனுப்பி வைக்கப்படும்.
மன்னிப்பு கேட்காவிட்டால் ஆசம்கான் மீது சபாநாயகர் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார்.