தனிநாடு விவகாரம்: கேட்டலோனியா அரசை சஸ்பெண்ட் செய்ய ஸ்பெயின் முடிவு

தனிநாடு கோரி பொதுவாக்கெடுப்பு நடத்தியுள்ள கேட்டலோனியா மாகாண அரசை சஸ்பெண்ட் செய்து விட்டு அங்கு மறுதேர்தல் நடத்த ஸ்பெயின் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சரவை கூட்டத்தில் ஸ்பெயின் பிரதமர்
அமைச்சரவை கூட்டத்தில் ஸ்பெயின் பிரதமர்
Published on

மாட்ரிட்:

ஸ்பெயினின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மாகாணமான கேட்டலோனியா தனி நாடக பிரிவது தொடர்பான வாக்கெடுப்பை கடந்த மாதம் 1-ம் தேதி நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் பங்கேற்ற 2.3 மில்லியன் மக்களில் 90% பேர் தனிநாடாக கேட்டலோனியா பிரிவதற்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து தனிநாடாக பிரிவது உறுதி என கேட்டலோனியா தலைவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, கேட்டலோனியா பாராளுமன்றத்தில் பேசிய கார்லஸ் பூஜ்டியமோன்ட், தனிநாடு வாக்கெடுப்பு முடிவுகளை ஏற்க்கொள்வதாக அறிவித்தார். இருப்பினும் தனிநாடு குறித்த அறிவிப்பை அவர் வெளியிடவில்லை. ஸ்பெயின் அரசு உடன் பேசி முடிவெடுக்கப்படும் என அவர் கூறியிருந்தார்.

இது கேட்டலோனியா மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் பின்னர், தனிநாடாக பிரிவது குறித்து பரிசீலனை செய்து ஐந்து நாட்களுக்குள் முடிவை அறிவிக்குமாறு ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜாய் கூறியிருந்தார். பிரிந்து செல்வதென்றால் அந்த முடிவை பரிசீலிக்க மேலும் மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அதன் பின்னரும் அவர்கள் உறுதியாக இருந்தால் 19-ம் தேதி கேட்டலோனியா அரசு கலைக்கப்படும் என மரியானோ ரஜாய் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஸ்பெயின் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 155-ன் படி ஸ்பெயின் அரசுக்கு கேட்டலோனியா பாராளுமன்றத்தை கலைக்கவும், ஸ்பெயினின் நேரடி ஆளுமையின் கீழ் கேட்டலோனியாவை கொண்டு வர முடியும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கார்லஸ் பூஜ்டியமோன்ட் உறுதியான முடிவுகள் எதுவும் எடுக்காத சூழ்நிலையில், ஸ்பெயின் அரசின் அவசர மந்திரி சபை கூட்டம் இன்று நடைபெற்றது. கேட்டாலோனியா அரசை சஸ்பெண்ட் செய்து விட்டு அங்கு மறுதேர்தல் நடத்த இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், கேட்டாலோனியா அரசை சஸ்பெண்ட் செய்யும் மசோதா செனட் சபையில் நிறைவேற வேண்டும் என்பதால், அந்த சபைக்கு ஸ்பெயின் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com