

ஸ்பெயின் நாட்டில் கேட்டலோனியா பகுதி தன்னாட்சி பெற்ற பிரதேசமாக இருந்து வந்தது. அங்கு தனி பாராளுமன்றமும் செயல்பட்டது.அந்த பகுதியை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், ஸ்பெயின் அரசு இதற்கு சம்மதிக்கவில்லை.
இந்த நிலையில் கேட்டலோனியா அரசு தனியாக மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தியது. அதில் 90 சதவீத மக்கள் தனி நாடுக்கு ஆதரவு தெரிவித்து ஓட்டு போட்டனர். இதற்கு ஸ்பெயின் அரசு கடும் நடவடிக்கை எடுத்து தன்னாட்சி அதிகாரத்தை ரத்து செய்தது.
ஆனால், அதையும் மீறி கேட்டலோனியா பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்தி தனி நாடாக சுதந்திர பிரகடனம் செய்தனர்.
இதனால் அதிரடி நடவடிக்கைகளை ஸ்பெயின் மேற்கொண்டது. கேட்டலோனியா பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. டிசம்பர் 21-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மேலும் கேட்டலோனியா பகுதி ஆட்சியை தன் வசப்படுத்தி கொண்டது. அங்குள்ள அதிகாரிகள் எல்லாம் மாற்றப்பட்டு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கேட்டலோனியா தலைவர்கள் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்ய ஸ்பெயின் முடிவு செய்துள்ளது. தனி நாடு அறிவிப்பு செய்த கேட்டலோனியா தலைவர் கார்லஸ் புட்ச் மான்ட் மற்றும் மந்திரிகள், முக்கிய தலைவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட இருக்கிறது.