விதைப்பண்ணைகளை மாநில இயக்குனர் ஆய்வு

ஈச்சம்பட்டி கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த விதைப்பண்ணைகளை மாநில இயக்குனர் ஆய்வு செய்தார்.
விதைப்பண்ணைகளை மாநில இயக்குனர் ஆய்வு
விதைப்பண்ணைகளை மாநில இயக்குனர் ஆய்வு
Published on

பெரம்பலூர்:

தமிழ்நாடு அரசு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குனர் சுப்பையன் பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார். அவர் ஈச்சம்பட்டி கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த டி.எம்.வி.14 ரக நிலக்கடலை விதைப்பண்ணை மற்றும் அரணாரை கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த வம்பன்-8 ரக உளுந்து விதைப்பண்ணையினை ஆய்வு செய்தார். 

செங்குணம் கிராமத்தில் 14 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் பயிரிடப்பட்டிருந்த கருணைக்கிழங்கு, வெங்காயம், மஞ்சள் மற்றும் தென்னை பயிர்களை பார்வையிட்டார். அப்போது பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் விதைப்பண்ணை அமைக்கும் போது கண்டிப்பாக மண் பரிசோதனை செய்து அதன் அடிப்படையில் உரமிட வேண்டும் என்றும், மேலும் சொட்டு நீர் அல்லது தெளிப்பு நீர் பாசனம் அமைத்து கூடுதல் மகசூல் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும் விதை பரிசோதனை நிலையத்தில் விதைகளின் முளைப்புத்திறனை அறிய நெல் சான்று விதை மாதிரிகளையும், நிலக்கடலை, எள் விதைகளின் ஈரப்பதம் அறியும் முறைகளையும், சுத்ததன்மை அறிய நெல் விதை மாதிரிக்கு சீட்ஸ்-புளோயரில் செயல் விளக்கத்தையும் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து அலுவலர்களின் பணி குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின்போது பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கணேசன், விதைச்சான்று உதவி இயக்குனர் தெய்வீகன், திருச்சி மண்டல விதை பரிசோதனை அலுவலர் லீமாரோஸ் பெரம்பலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) பிரேமாவதி, விதைச்சான்று அலுவலர் ஆஷாலதா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com