

வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் இருதரப்பு எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பான்முன்ஜோம் கிராமத்தில் நடந்தது.
2 ஆண்டுகளுக்கு பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே முதன்முதலாக நடந்துள்ள இந்த சந்திப்பு இணக்கமாக அமைந்தது. தென் கொரியாவின் பியாங்சாங் நகரில் அடுத்த மாதம் 9-ந் தேதி தொடங்குகிற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் தனது நாட்டு அணியை அனுப்ப வடகொரியா ஒப்புக்கொண்டது. இது இருதரப்பு உறவில் ஒரு திருப்பமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தென் கொரியாவின் அதிபர் மூன் ஜே இன் நேற்று சியோலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதாக வடகொரியா அறிவித்து இருப்பது மிகவும் விரும்பத்தக்கது. அதே நேரத்தில் வடகொரியா அணு ஆயுத திட்டங்களை முடிவுக்கு கொண்டுவராத வரையில், இருதரப்பு உறவில் முன்னேற்றம் ஏற்பட்டு விடாது” என்று கூறினார்.
தொடர்ந்து அவர் கூறும்போது, “புதிதாக ஆத்திரம் ஏற்படுத்துகிற வகையில் வடகொரியா செயல்பட்டால், அந்த நாடு இன்னும் சர்வதேச அளவிலான பொருளாதார தடைகளை சந்திக்க வேண்டியது வரும். அணு ஆயுதங்களை கைவிடுவது தான் கொரிய தீபகற்பத்தின் அமைதிக்கான வழியாக இருக்க முடியும்” என்றார்.